Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

ஈரோட்டில் காவலர்களுக்கு கரோனா தொற்று உயிரிழப்பு எண்ணிக்கை 150 ஆக உயர்வு

ஈரோடு

ஈரோடு போக்குவரத்து காவல் துறையில் பணிபுரியும் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர்களுடன் பணிபுரிந்த காவலர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இந்நிலையில் ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் எஸ்.ஐ. மற்றும் இரு தலைமைக் காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கரோனா தொற்றுக்குள்ளான எஸ்.ஐ. பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு தலைமைக் காவலர்களும் தங்கள் வீடு களில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் மற்ற போலீஸாருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 305 ஆக உள்ளது. இதில், 13 ஆயிரத்து 979 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனாவில் நேற்று முன் தினம் இரு பெண்கள் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்தது. கரோனா தடுப்பூசி போடும் பணி ஒருபுறம் நடந்து வரும் நிலையில், ஒரே நாளில் இருவர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x