Published : 29 Jan 2021 03:15 AM
Last Updated : 29 Jan 2021 03:15 AM

‘சலுகைகளை நிறுத்தவே சிறப்பு ரயில்கள்’

தஞ்சாவூர் தஞ்சாவூரில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன்(எஸ்ஆர்எம்யூ) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, கோட்டச் செயலாளர் வீரசேகரன் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் அருள்முருகன் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற எஸ்ஆர்எம்யூ தலைவர் ராஜாதர், செய்தியாளர்களிடம் கூறியது:

கரோனா தொற்றை காரணம் காட்டி ரயில்வே தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 18 மாத அகவிலைப்படியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. ரயில்வே மற்றும் பாதுகாப்பு துறை தளவாட உற்பத்தி நிறுவனங்களை தனியாருக்கு விட முயற்சி மேற்கொண்டு வரும் மத்திய அரசைக் கண்டித்து, பிப்.1-ம் தேதி ரயில்வே தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ரயில்வே டிக்கெட்டில் கிடைக்கும் சலுகைகளை நிறுத்துவதற்காகவே, கரோனாவைக் காரணம் காட்டி, வழக்கமாக இயக்கும் ரயில்களை இயக்காமல், சிறப்பு ரயில்களாக மத்திய அரசு இயக்கி வருகிறது. சிறப்பு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளை தவிர, மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு சலுகை கிடைப்பதில்லை. வருமானத்தை மட்டும் கணக்கில்கொள்ளும் மத்திய அரசு, அடித்தட்டு மக்களைப்பற்றி கவலைப்படவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x