Published : 26 Jan 2021 03:19 AM
Last Updated : 26 Jan 2021 03:19 AM
அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய வடமாநிலத்தில் பதுங்கியுள்ள பவாரியா கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஜெயில்தர்சிங்கை கைது செய்ய 3 வார கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் வீட்டுக்குள் நுழைந்த வடமாநில பவாரியா கொள்ளையர்கள் அவரை கொலை செய்தனர். பின்னர் அவரது குடும்பத்தினரை தாக்கி 63 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
கடந்த 2005-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை மையமாக வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக பெரியபாளையம் போலீஸார் 32 பேர் மீது வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடிவந்த னர். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த கொள்ளை யர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவிட் டார். இந்நிலையில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் பவாரியா மற்றும் அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 23 பேர் தலைமறைவாகினர். கைதான ஓம்பிரகாஷ் பவாரியா சிறைக்குள்ளேயே இறந்து விட்டார். ஜெகதீஷ் கடந்த 2005-ம் ஆண்டு முதல் விசாரணைக் கைதியாக புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில் ஜெகதீஷ் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு முடிக்கப்படாமல் இருப்பது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி பி.பாரதிதாசன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயில்தர்சிங் என்பவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், விசாரணை தடைபட்டுள்ளது என்றும், நீதிமன்றம் 3 வாரம் அவகாசம் வழங்கினால் அவரை கைது செய்வது தொடர்பாகவோ அல்லது வழக்கை முடிப்பது தொடர்பாகவோ காவல்துறை தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும், என்றார்.
அப்போது காணொலி காட்சி வாயிலாக ஆஜரான திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன், வடமாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தி ஜெயில்தர்சிங்கை கைது செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, தலைமறைவாகியுள்ள ஜெயில்தர் சிங்கை கைது செய்ய 3 வார காலத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, ஜெகதீஷின் ஜாமீ்ன் மனுவை தள்ளுபடி செய்து விசாரணையை பிப்.15-க்குதள்ளி வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT