Published : 25 Jan 2021 03:15 AM
Last Updated : 25 Jan 2021 03:15 AM
கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் மணிகண்டன், நுண்ணறிவுப் பிரிவு காவலர் கருணாகரன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு அன்னூர் பேருந்து நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய முறையில் சுற்றித்திரிந்த இருவரைப் பிடித்து, தலைமைக் காவலர் மணிகண்டன் விசாரித்தார். முன்னுக்குப் பின் முரணாக பதில் தெரிவித்த இருவரும் திடீரென அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.
அவர்களை பிடிப்பதற்காக துரத்திச் சென்ற தலைமைக் காவலர் மணிகண்டன் கீழே விழுந்து, காயமடைந்தார். ஆனாலும், உடனடியாக எழுந்து, மீண்டும் அவர்களை துரத்திச் சென்று, சிறிது தூரத்தில் இருவரையும் பிடித்தார்.
விசாரணையில், பிடிபட்டவர்கள் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம், ஷேக்தாவூத் என்பதும், பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த அன்னூர் போலீஸார், அவர்களிடமிருந்த கத்தியைப் பறிமுதல் செய்தனர்.
காயமடைந்த நிலையிலும், இருவரையும் துரத்திச் சென்று பிடித்த தலைமைக் காவலர் மணிகண்டனுக்கு, பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT