Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 6 லட்சம் பேருக்கு ரூ.2,691 கோடி நிதி பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

புதுடெல்லி

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 6.1 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, நாட்டில் உள்ள அனைவருக்கும் வரும் 2022-க்குள் சொந்த வீடுகிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதன்படி, கிராமப்புறங்களுக்காக பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் 2016-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இதுவரை 1.26 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டு வசதித் திட்டப் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும், 100% நிதியுதவியாக, தலா ரூ.1.20 லட்சம் (சமவெளிப் பகுதிகள்) மற்றும் ரூ.1.30 லட்சம் (மலைப்பிரதேச மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள், இடர்ப்பாடு மிகுந்த பகுதிகள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள், ஐஏபி, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்) வழங்கப்படுகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த திட்டத்தின் கீழ் 6.1 லட்சம் பயனாளிகளுக்காக மொத்தம் ரூ.2,691 கோடி நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கழிப்பறை கட்ட ரூ.12,000

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், ஏற்கெனவே, முதல் தவணைத் தொகையை பெற்ற 80 ஆயிரம் பயனாளிகளுக்கான இரண்டாவது தவணைத் தொகை, 5.30 லட்சம் பயனாளிகளுக்கான முதல் தவணைத் தொகை ஆகியவை, தற்போது விடுவிக்கப்பட்ட நிதியுதவியில் அடங்கும்.

கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டப் பயனாளிகளுக்கு, வீட்டு வசதிக்கான நிதியுதவி தவிர, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம், திறன் பயிற்சி பெறாத தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் வழங்கப்படுவதோடு, கிராமப் புறங்களுக்கான தூய்மை இந்தியா இயக்கம் அல்லது வேறு பிற பிரத்யேக நிதியுதவி திட்டத்தின் கீழ், நவீன கழிப்பறைகள் கட்டுவதற்காகவும் ரூ.12,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

மத்திய அரசு மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் பிற திட்டங்களுடன் இணைத்து, பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு, மின்சார இணைப்பு, ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளும் செய்து தரப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x