Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

எஸ்-400 ஏவுகணை பயிற்சி பெறுவதற்காக ரஷ்யாவுக்கு செல்கிறது முதல் இந்திய ராணுவக் குழு

புதுடெல்லி

எஸ்-400 ஏவுகணைகளை இயக்குவதற்கான பயிற்சி பெறுவதற்காக முதல் ராணுவக் குழு ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளது.

இந்திய ராணுவத்துக்கு தேவையான போர் விமானங்கள், கப்பல்கள் உள்ளிட்ட ஏராளமான போர்தளவாடங்கள் ரஷ்யாவிடமிருந்து அவ்வப்போது வாங்கப்படுகின்றன. இதன்படி, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. தரையிலிருந்து வானில் உள்ள எந்த இலக்கையும் தாக்கும் சக்தி படைத்தவை இந்தஏவுகணைகள். இவற்றை இயக்குவதற்கான பயிற்சி பெறுவதற்காக இந்திய ராணுவக் குழு ஒன்று விரைவில் ரஷ்யா செல்ல உள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிக்கோலய் குடாஷெவ் டெல்லியில் நேற்று கூறும்போது, “இந்தியா, ரஷ்யா இடையே ராணுவ தளவாடங்கள் பெறுவது தொடர்பாக ஏராளமான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் எஸ்-400 ஏவுகணை பயிற்சி பெறுவதற்காக ராணுவக் குழு விரைவில் ரஷ்யா செல்லவுள்ளது. இதுபோன்ற பயிற்சி பெறுவதற்காக ரஷ்யா செல்லும் முதல் இந்திய ராணுவக்குழு இதுவே.

சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும், ஐ.நா. சபையின் விதிகளின்படியும் இந்தியா, ரஷ்யா இடையே ராணுவ ஒப்பந்தங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில்தான் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குகிறது. ரஷ்யா செல்லும் இந்தியவீரர்கள் எஸ்-400 ரக ஏவுகணைகளை இயக்குவது உள்ளிட்ட பயிற்சிகளைப் பெறுவர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x