Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் காலில் அறுவை சிகிச்சைமேற்கொள்ளப்பட்டது. அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கமல்ஹாசனின் காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது காலில்அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கட்சிப் பணி,சினிமா படப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், காலில் தொடர்ந்து வலி இருந்ததால், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த ஞாயிறு இரவு அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, கமலுக்கு நேற்று காலை மருத்துவர்கள் காலில் அறுவை சிகிச்சை செய்தனர். இதுதொடர்பாக, தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கமல்ஹாசனில் வலது கால்எலும்பில் ஏற்பட்ட தொற்று காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொற்றை அகற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. கமல்ஹாசன் குணமடைந்து வருகிறார். தற்போது நலமாக உள்ளார்.
இவ்வாறு மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக் ஷரா ஹாசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அப்பா நலமுடன் உள்ளார்
மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவுக்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பாநலமாக, உற்சாகமாக இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக்கொள்கிறார்கள்.4,5 நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் மக்களை சந்திப்பார். அனைவரது அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT