Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்றபோது துப்பாக்கி வெடித்து ஒருவர் மரணம்

கோவை மதுக்கரை வனச் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒருவரை யானை தாக்கியதாக வனத் துறைப் பணியாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பேரூர் தீத்திபாளையம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமியின் (37) வீட்டுக்கு வனப் பணியாளர்கள் சென்றனர்.

அப்போது நடைபெற்ற விசாரணையில், அய்யாசாமி நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத் துறையினர் கூறியதாவது: உயிரிழந்த அய்யாசாமி நேற்றுமுன்தினம் பிற்பகல் ராமன், ஆனந்த், ரங்கநாதன், மொட்டை (எ) ரங்கநாதன், பட்டீஸ்வரன், சின்னராசு ஆகிய 6 பேருடன், அய்யாசாமி மலை வனப் பகுதிக்குள் காட்டுப்பன்றி வேட்டைக்காக துப்பாக்கியுடன் சென்றுள்ளார். மாலையில் ஒரு பாறையில் ஏறும்போது, துப்பாக்கியை எடுத்துச் சென்ற நபர் தவறி விழுந்துள்ளார். அப்போது துப்பாக்கி வெடித்து, அய்யாசாமியின் வலது தொடையை பலமாக தாக்கியுள்ளது. உடன் வந்தவர்கள் அவரை சுமந்து வந்து காட்டுக்கு வெளியே சாலையோரத்தில் விட்டுவிட்டு, அய்யாசாமியின் மனைவிக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். குடும்ப உறுப்பினர்கள் அங்கு சென்று அய்யாசாமியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் அய்யாசாமி உயிரிழந்துவிட்டார்.

உடன் சென்ற ராமன் மற்றும் ஆனந்தை அன்று இரவே காவல் துறையினர் பிடித்தனர். ரங்கநாதன், மொட்டை (எ) ரங்கநாதன், பட்டீஸ்வரன் மற்றும் சின்னராசு ஆகிய நான்கு பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்தில் ஒரு நாட்டுத் துப்பாக்கி, ஈட்டி, கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தமிழக வனச் சட்டம் மற்றும் வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x