Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM

103 வயது முதியவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு புதிதாக 551 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று

தமிழகத்தில் கரோனாவால் 103 வயது முதியவர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். புதிதாக 551 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 316, பெண்கள் 235 என மொத்தம் 551 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 158 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 31,323 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 23,230 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 13,326 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 788 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். 5,725 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று முதியவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 103 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,272 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,069 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் 252 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 52 லட்சத்து 79,808 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 50,501 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி

கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 6 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு 160 மையங்களில் கோவிஷீல்டும், 6 மையங்களில் கோவேக்ஸின் தடுப்பூசியும் போடப்படுகிறது. முதல் நாளில் 3,126 பேர், 2-வது நாளில் 3,080 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 3-வது நாளான நேற்று தமிழகம் முழுவதும் 10,051 பேருக்கு கோவிஷீல்டு, 205 பேருக்கு கோவேக்ஸின் என மொத்தம் 10,256 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் வாரத்தில் 7 நாட்களும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x