Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

சென்னையில் கரோனா சிகிச்சை எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

சென்னை

சென்னையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

சென்னையில் இதுவரை 2 லட்சத்து 28 ஆயிரத்து 911 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 லட்சத்து22 ஆயிரத்து 903 பேர் குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 16-ம்தேதி நிலவரப்படி சென்னையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,946 ஆக குறைந்துள்ளது.

மணலி மண்டலத்தில் 31 பேர்

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் தற்போது தலா 1 சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 233 பேர், அண்ணாநகர் மண்டலத்தில் 223 பேர் சிகிச்சையில் உள்ளனர். குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் தற்போது தினமும் புதிதாக கரோனா தொற்றால்பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் 200-க்கும் கீழ் குறைந்துள்ளது. 16-ம் தேதி நிலவரப்படி, அன்று ஒரு நாளில் 176 பேர் மட்டுமே புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மாநகராட்சி தொடர் நடவடிக்கை

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “மாநகராட்சியின் நடவடிக்கையால் சென்னையில் கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும் பரிசோதனை எண்ணிக்கை தினமும் 9 ஆயிரத்துக்கு குறையாமல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கரோனா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் கரோனா தொற்று இல்லாத நிலை உருவாகும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x