Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி மதுரையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்களப் பணியாளர்கள் ஆர்வம்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் பழனிசாமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் 3,000 மையங்களில் கரோனா தடுப்பூசி கோவிஷீல்டு போடும் பணியை பிரதமர் மோடி நேற்று காலை 10.30 மணி அளவில் டெல்லியில் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசினார்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 166 மையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், மதுரை ஆட்சியர் அன்பழகன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, சரவணன், மாணிக்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கரோனா தடுப்பூசி போடப்பட்ட மதுரை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடுவோர் காத்திருப்பு அறை, கரோனா தடுப்பூசி போடும் அறை, கண்காணிப்பு மையம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டிருந்தன.

30 நிமிடங்கள் தங்கவைப்பு

மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி முன்களப் பணியாளர்களுக்கு மருத்துவர்கள் தடுப்பூசிகளைப் போட்டனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 30 நிமிடங்கள் வரை கண்காணிப்பு அறையில் தங்க வைக்கப்பட்டனர். பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பது தெரிந்த பிறகே அனுப்பி வைக்கப்பட்டனர்.

4.89 லட்சம் பேருக்கு...

தமிழகத்தில் முதல் கட்டமாக 4.89 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனை, கோவில்பாப்பாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கே.புதூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மேலூர் அரசு மருத்துவமனை, ஒரு தனியார் மருத்துவமனை ஆகிய மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

ஒவ்வொரு மையத்திலும் தலா 100 பேருக்கு மாவட்ட சுகாதாரத் துறையினர் நேற்று தடுப்பூசி செலுத்தி கண்காணித்தனர்.

நானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமரின் தீவிர முயற்சியால் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளட்டும். அவர்களுக்குத்தான் முன்னுரிமை. அதன் பிறகு நானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன். நீங்களும் போட்டுக் கொள்வீர்கள்.

இரண்டாவது தடுப்பூசி 28 நாட்கள் கழித்து போடப்படும். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி. மருத்துவர்கள், செவியர்கள் ஆர்வமாக முன்வந்து தடுப்பூசி போட்டுள்ளனர். அதனால், தடுப்பூசியைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x