Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டாக் கத்தியால் கேக் வெட்டியதற்காக வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி

பட்டாக் கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டியது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியின்பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துதெரிவித்தனர். சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை பதிவிட்டனர்.

முன்னதாக, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட குழுவினர் மத்தியில் பட்டாக் கத்தியால் விஜய் சேதுபதி பிறந்தநாள் கேக் வெட்டும் புகைப்படம் சமூக வலைதளத்தில் 15-ம் தேதி இரவு வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினரை ரசிகராக கொண்டுள்ள விஜய் சேதுபதி இப்படி செய்திருக்க கூடாது. இதுதவறான முன்னுதாரணம். அவர்சமூகப் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

என் அலுவலகத்தில் கடந்த3 நாட்களுக்கு முன்பு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்தநாள் கேக்கை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன்.

பொன்ராம் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் நடிக்க இருக்கிறேன். அந்த படத்தின் கதைப்படி, ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். எனவேதான், அந்த படக் குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடியபோது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டினேன்.

இது தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனி இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x