Published : 16 Jan 2021 03:16 AM
Last Updated : 16 Jan 2021 03:16 AM
காரைக்கால் பகுதியில் உள்ள கோசாலைகளில் நேற்று மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் அருகே கந்தன்குடியில் உள்ள உமா பசுபதீஸ்வர் கோயில் கோசாலையில், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது.
இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை நடத்தப்பட்டு பசுக்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மாலைகள் அணிவித்து, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைக் காட்டப்பட்டது. பின்னர் பசுக்கள் வீதியுலாவாக அழைத்து வரப்பட்டன.
கைலாசநாதர் கோயிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோயில் பசுமடத்தில் உள்ள மாடுகள், கன்றுகளை கோயில் வளாகத்தில் சுந்தராம்பாள் சன்னதிக்கு அருகே கொண்டு வந்து மாலைகள் அணிவிக்கப்பட்டன. பின்னர், சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனைக் காட்டப்பட்டது. பொங்கல் வைத்து படையலிடப்பட்டது.
ஊழியப்பத்து பகுதியில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோசாலையிலும், தர்பாரண்யேஸ்வரர் கோயில் பசுமடத்திலும் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT