Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM

தீயணைப்பு, சிறைத் துறையினர் காவலர்கள் உட்பட 3,186 பேருக்கு பொங்கல் சிறப்பு பதக்கங்கள் முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை

தமிழக காவல் துறை மற்றும் சீருடை பணியாளர்கள் 3,186 பேருக்குபொங்கல் சிறப்பு பதக்கங்கள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறை மற்றும் சீர்திருத்தத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தங்கள் பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு தமிழக முதல்வரின் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தாண்டு காவல் துறையில் ஆண், பெண் காவலர் நிலை-1, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகியநிலைகளில் 120 அலுவலர்களுக்கும் சிறை மற்றும் சீர்திருத்தத்துறையில் ஆண், பெண் முதல்நிலை வார்டர்கள், இரண்டாம் நிலை வார்டர் நிலைகளில் 60 பேருக்கும் ‘தமிழக முதல்வரின் சிறப்பு பணிப் பதக்கங்கள்’ வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400 வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும்.

மேலும், காவல் வானொலி பிரிவு, நாய்ப் படை பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ‘தமிழக முதல்வரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணி பதக்கம்’ வழங்கப்படுகிறது. இப்பதக்கங்கள் பெறும்அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர் நிலைகளுக்கு தக்கவாறு ரொக்கத் தொகை வழங்கப்படும்.

பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 3,186 பேருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம்மற்றும் முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x