Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM

திருமூர்த்தி அணை நிரம்பியதால் பாலாற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

திருமூர்த்தி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 20 ஆண்டுகளுக்குப் பின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

உடுமலை திருமூர்த்தி அணையின் உயரம் 60 அடி. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் எந்த நேரத்திலும் அணையிலிருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. அதனால் பாலாற்றின் கரையோரப் பகுதிகளான வல்லகுண்டபுரம், ஜிலேப்பிநாயக்கன் பாளையம்,தேவனூர் புதூர், வல்லகுண்டாபுரம், அர்த்தநாரிபாளையம், கம்பாலபட்டி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 59 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக விநாடிக்கு 950 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

காண்டூர் கால்வாய் வாயிலாக விநாடிக்கு 800 கன அடியும், பாலாறு மூலம் விநாடிக்கு 1065 கன அடியும் அணைக்கு நீர் வரத்து கிடைத்து வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் அணையின் நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், பாலாற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x