Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM

திருப்பூர் நிட்டிங் நிறுவனத்தில் தீ விபத்து

திருப்பூர்

திருப்பூர் அருகே நிட்டிங் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள், நூல், துணிகள் உட்பட பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.

திருப்பூர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சரவணமுத்து. இவர், திருப்பூர் பெருமாநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட அய்யம்பாளையம் பகுதியில் நிட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். நூல் மூலமாக பின்னலாடைத் துணிகள்உற்பத்தி செய்யும் பணிகள் இங்கு நடைபெற்று வந்தன. பொங்கல் பண்டிகை காரணமாக தொழிலாளர்களுக்கு நேற்று நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிறுவனத்தின் உள்ளிருந்து கரும்புகை வெளிவந்ததைக்கண்ட அருகில் வசிப்போர், உடனடியாக சரவணமுத்து மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கர் தலைமையில் 2 வண்டிகளில் வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நிறுவனத்தின் உள்ளே ஏராளமான நூல் பின்னலாடைத் துணிகள்இருந்ததால் தீ வேகமாக பரவியது, அதோடு மேற்கூரையும் வெடித்து சரிந்தது. தீ மேலும்பரவியதால் கூடுதல் டேங்கர் லாரிகள் வரவழைக்கப்பட்டன. சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் இயந்திரங்கள், நூல், துணிகள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சேதமாயின. விபத்துக்கு மின்கசிவு காரணமாகஇருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம்குறித்து பெருமாநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘தீ விபத்தில் நிட்டிங் நிறுவனத்தின் உள்ளே இருந்த 20-க்கும் மேற்பட்ட நிட்டிங் இயந்திரங்கள், உற்பத்தித் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 30 டன் நூல், உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 டன் துணிகள்எரிந்து சேதமாகி உள்ளதாகவும்,அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் எனவும், உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x