Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

யூ-டியூப் சேனல்களில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டால் கைது நடவடிக்கை காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை

யூ-டியூப் சேனல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

யூ-டியூப் சேனல்களை நடத்தி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக நபர்களை கவரும்வகையில் சில யூ-டியூப் சேனல்கள் எல்லை மீறி செயல்படுவதாகவும், ஆபாச வீடியோ மற்றும் பேட்டிகளை அதில் பதிவேற்றம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் யூ-டியூப் சேனல் ஒன்று அண்மையில் பெண்களை ஆபாசமாக பேட்டி எடுத்து அதை வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட யூ-டியூப் சேனல் உரிமையாளர், தொகுப்பாளர், கேமராமேன் ஆகிய 3 பேரை சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, பொது மக்களை கவரும் வகையில் பேட்டி எடுத்து யூ-டியூப் சேனல் அல்லது சமூக வலை தளங்களில் வெளியிடுகிறோம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவில் ஈடுபட்டால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

உன்னிப்பாக கண்காணிப்பு

சமூக வலை தளங்களை சைபர் கிரைம் போலீஸார் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். எல்லை மீறுபவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் யூ-டியூப் சேனல்களில் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பதிவான வீடியோக்களை நீக்கவும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x