Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

முதல்வர் வேண்டுகோளை ஏற்று மின்துறை வேலைநிறுத்தம் புதுவையில் ஒத்திவைப்பு

தனியார் மயத்தை எதிர்த்து புதுவை மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், முதல்வர் பேச்சுவார்த்தையையடுத்து போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.

தனியார்மயத்தை எதிர்த்து புதுவை மின்துறை ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைந்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கியுள்ளனர்.

போராட்டக்குழு சார்பில் கடந்த 11-ம் தேதி காலவரையற்ற வேலை புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர். நாள்தோறும் பணிகளை புறக்கணித்து வம்பாகீரப்பாளையம் தலைமை அலுவலகம் முன்பு ஒன்று கூடி கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டு வந்தனர். 144 தடை உத்தரவையும், சஸ்பெண்ட் எச்சரிக்கையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் இரவு போராட்டக்குழு நிர்வாகிகளை அழைத்து பேசினார். அப்போது, “பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாமல் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள். பொங்கல் பண்டிகைக்கு பிறகு மத்திய மின்துறை அமைச்சரை சந்திக்க தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துச் செல்கிறேன். அவரிடம் கோரிக்கையை வலியுறுத்துவோம்” என்று கூறினார்.

இருப்பினும் 3-வது நாளாக நேற்று மின்துறை ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதற் கிடையே மின்துறை தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர் களுடன் கலந்து ஆலோசித்தனர். அதைத்தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மின்துறை தொழிற்சங்கத்தினர் கூறுகையில், "வரும் ஜனவரி 21, 22-ம் தேதிகளில் மத்திய அமைச்சரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்வதாக முதல்வர் உறுதி தந்துள்ளார். அதன் அடிப்படையில் போராட்டத்தை வரும் 31-ம் தேதி வரை தள்ளி வைக்கிறோம். பிரச்சினை தீராவிட்டால், வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்" என்று தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x