Last Updated : 14 Jan, 2021 03:22 AM

 

Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

தென் மாவட்டங்களில் கனமழை எதிரொலி பொங்கலுக்கு பின்னர் மாஞ்செடி விற்பனை அதிகரிக்க வாய்ப்பு சந்தூர் விவசாயிகள், நர்சரி உரிமையாளர்கள் நம்பிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் கிராமத்தில் உள்ள நர்சரியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மாஞ்செடிகள்.

கிருஷ்ணகிரி

தென்மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு உள்ளதால் பொங்கலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நர்சரிகளில் மாஞ்செடிகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதன்மை வகிக்கிறது. அல்போன்சா, பீத்தர், மல்கோவா, பங்கனப்பள்ளி, காலபாட், பெங்களூரா உள்ளிட்ட சுவை மிகுந்த மாங்கனிகள் மூலம் மாங்கூழ், மா ஊறுகாய், மாம்பழ பேஸ்ட், மா சுவைக்கான அடிப்படை மூலப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மா சாகுபடி மூலம் விவசாயிகள், மாங்கூழ் தொழிற்சாலைகள் மற்றும் மா ஊறுகாய் தயாரிப்பு மூலம் 2 லட்சம் குடும்பத்தினர் பயன் அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக மாங்கன்று, மாஞ்செடி உற்பத்தியில் நேரடியாகவும், மறைமுகமாவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் பயன்பெற்று வருகின்றனர். போச்சம்பள்ளி, சந்தூர், பட்டகப்பட்டி, ஜெகதேவி, தொகரப்பள்ளி பகுதிகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தரமான மாஞ்செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சந்தூர் கிராமத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மா நர்சரிகளில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திர, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து செடிகளை வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர். இந்நிலையில், பரவலாக மழை பெய்துள்ள நிலையில் பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் மாஞ்செடிகள் விற்பனை அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு பரவலாக மழை இருந்தும், கரோனா பாதிப்பால் மாஞ்செடிகளை வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது. தற்போது மாஞ்செடிகள் விற்பனை மந்தமாக உள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து விவசாயிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. உள்மாவட்டங்களில் இருந்தும் குறைவான அளவிலேயே விவசாயிகள் வந்து மாஞ்செடிகளை வாங்கிச் செல்கின்றனர். பெங்களூரா ரக மாஞ்செடிகள் (ஒன்று) ரூ.90, காதர், அல்போன்சா, மல்கோவா உள்ளிட்டவை ரூ.60 முதல் தரத்தை பொறுத்து விற்பனையாகிறது. தென்மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு உள்ளதால் பொங்கலுக்கு பிறகு விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x