Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

குத்தாலம் அருகே பொன்னூர் ஊராட்சியில் நகரும் ரேஷன் கடை திறக்காததை கண்டித்து மக்கள் சாலை மறியல்

குத்தாலம் அருகே நகரும் ரேஷன் கடை திறப்பதில் தாமதம் ஏற்படுவதைக் கண்டித்து, பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த பொன்னூர் ஊராட்சியில் நகரும் ரேஷன் கடை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த மாதம் நகரும் ரேஷன் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டபோதும், திறக்கப்படவில்லை.

இந்நிலையில், பொன்னூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ஜன.13-ம் தேதி(நேற்று) நகரும் ரேஷன் கடை திறக்கப்படும் என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பதாகையில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, நகரும் ரேஷன் கடையை திறக்க உள்ளதாக தெரிவித்திருந்ததுடன், முதல்வர், துணை முதல்வர், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், தமிழக உணவுத் துறை அமைச்சர் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம் பெற்றி ருந்தன.

இதையடுத்து, நேற்று நகரும் ரேஷன் கடை திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மதியம் 12 மணி ஆகியும் கடை திறக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொது மக்கள் பொன்னூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திருமங்கலம்- மயிலாடுதுறை சாலையில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த குத்தாலம் போலீஸார் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் நகரும் ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x