Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்

சென்னை: தஞ்சாவூரில் மின்கம்பி மீது பேருந்து உரசியதில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, சாலையோர மின்கம்பி மீது உரசியதில், பேருந்தில் பயணித்த கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கணேசன், வரகூரைச் சேர்ந்த ராமாமிர்தம் மகன் கல்யாணராமன், மணிகண்டன் மனைவி கவுசல்யா, அரியலூரைச் சேர்ந்த தங்கவேலு மகன் நடராஜன் ஆகிய 4 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x