Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
திருப்பூர்: பனியன் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய, மாநில அரசுகள் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரக் குழு கூட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் பி.ஆர்.கணேசன்தலைமை வகித்தார். கடந்த ஒரு மாதமாக பனியன் தொழிலுக்கு தேவையான ஹொசைரி நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பனியன் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை உயர்வால் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதியளித்தது, விலை உயர்வுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
உற்பத்தியாளர் சங்கங்களும் நூல் விலை உயர்வைக் கைவிடக் கோரி, நூல் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இருப்பினும், விலை உயர்ந்து கொண்டே வருவதால் பனியன் தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும். தொழிலாளர் வேலைவாய்ப்பும் பறிபோகும். கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தற்போதுதான் மெல்ல, மெல்ல பனியன் தொழில் சீராகி வருகிறது. இந்த வேளையில் நூல் விலை உயர்வு ஏற்புடையதல்ல. எனவே, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT