Last Updated : 13 Jan, 2021 03:14 AM

 

Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

விருத்தாசலம் அருகே சுடுகாட்டுப் பாதைகள் ஆக்கிரமிப்பு வயல், ஆற்றின் வழியாக சடலங்களை எடுத்துச் செல்லும் அவலம்

விருத்தாசலம் அருகே சுடுகாட்டுக்குச் செல்ல போதுமான சாலை வசதிகள் இல்லாததால், உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

விருத்தாசலத்தை அடுத்த கொடுக்கூர் கிராமத்தில் வசித்து வந்த கரைமேல் (71) என்பவர் வயது மூப்பின் காரணமாக நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் சடலத்தை எரி யூட்டச் சுடுகாட்டுக்குப் பாதை இல்லாத நிலையில், நெல் வயல்களுக்கு இடையேதூக்கிச் சென்று எரியூட்டினர்.

சுடுகாட்டுக்குப் பாதை இல்லையா என அதே கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவரிடம் விசாரித்தபோது, ''எங்கள் ஊர் மயானத்திற்குப் பாதை இருந்து வந்தது. ஆனால், அந்தப் பாதையைச் சில தனி நபர்கள் ஆக்கிரமித்து விளை நிலமாக மாற்றிக் கொண்டனர். வருவாய்த் துறையில் பணிபுரியும் சிலர் இதற்கு உடந்தையாக இருந்து வந்துள்ளனர். ‘பாதையை ஆக்கிரமிக்கிறீர்களே!, சட லத்தை எப்படித் தூக்கிச் செல்வது?’ எனக் கேட்டதற்கு, ‘நாங்கள் உங்களை மறிக்கவில்லை, நீங்கள் விளைநிலம் வழியாக எடுத்துச் செல்லலாம்’ எனக்கூறுகின்றனர். காலப்போக்கில் அவ்விடத் தைச் சுற்றிக் கம்பி வேலி அமைத்து விடுவார்கள்'' என்றார்.

இரு தினங்களுக்கு முன் விருத் தாசலத்தை அடுத்த சொட்டவனம் கிராமத்தில் உயிரிழந்த ரத்தினம் (74) என்பவரின் உடலைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல வழியில்லாமல், ஆற்றில் மிதக்கும் கட்டைகளைக் கட்டி சட லத்தை அதன் மீது எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

அதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் மேலப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் (78) என்பவர் உயிரிழந்தபோது, அவரது உடலைக் கொண்டு செல்ல வழியின்றி ஓடையின் குறுக்கே கயிறு கட்டி அதன்மூலம் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

சுயநலவாதிகளால் பிரச்சினை

இதுகுறித்து மேலப்பாளையூர் ஊராட்சி மன்றத் தலைவர் விருத்தகிரி யிடம் கேட்டபோது, ''பிறப்புக்காக அரசு மருத்துவமனைகள் ஆங் காங்கே கட்டப்பட்டு முறையாகச் செயல் படுகின்றன.

ஆனால் ஒருவர் இறந்து விட்டால் அவரை அடக்கம் செய்யச் சுடுகாடும், அதற்கான பாதையும் அவசியம் என்பதை மக்கள் உணர்வதில்லை. நான் அரசைக் குறைகூற விரும்பவில்லை. அரசு எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால் இடையில் இருக்கும் சில சுயநல அலுவலர்களால் சுடுகாடும், பாதைகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாவது வாடிக்கையாகி வருவது வேதனைய ளிக்கிறது.

தொடர் கனமழையினால் மயானத்தின் நிலைகள் சற்று வெளிச்சத்துக்கு வந்து,அதிகாரிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலப்பாளையூர் சம்பவத்திற் குப் பின் கடலூர் ஆட்சியர் சந்திர சேகர் சாகாமூரி நேரில் வந்து பார்வை யிட்டதோடு, ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அது மட்டும் போதாது, ஆக்கிரமிப்பில் உள்ள பாதைகளையும், சுடுகாடுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x