Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓசூர் மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் அதிகளவு பனிப்பொழிவு காரணமாக மலர்கள் மொட்டிலேயே கருகி, பூக்களின் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. இதனால் ஓசூர் சந்தைக்கு மலர்களின் வரத்து வெகுவாக குறைந்து, கடந்த சில நாட்களாக விலை அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதி கரித்துள்ளதால், ஓசூர் சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக ஓசூர் மலர்ச்சந்தை மொத்த வியாபாரிகள் கூறிய தாவது:
சந்தையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட பட்டன் ரோஜாவின் விலை ரூ.200 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,500-க்கு விற்பனையான மல்லிகைப்பூவின் விலை ரூ.2,000 முதல் ரூ.2,500 வரையும் உயர்ந்துள்ளது. முல்லை ரூ.800-லிருந்து ரூ.1,600-ஆகவும், சம்பங்கி ரூ.50-லிருந்து ரூ.100-ஆகவும், சாமந்தி ரூ.120-லிருந்து ரூ.200 முதல் ரூ.250-ஆகவும், கனகாம்பரம் ரூ.1000-லிருந்து ரூ.2000 வரையும் விலை உயர்ந்துள்ளது.
ஓசூர் மலர்ச் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையிலும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறு வியாபாரிகள் அதிகளவில் வந்து மலர்களை வாங்கிச் செல்வதால் பொங்கல் விற்பனை சூடு பிடித்துள்ளது. பொங்கல் தினத்தன்று மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு ஓசூர் மலர்ச் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT