Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

ஆவணங்களை மாற்றித் தராமல் இழுத்தடிப்பு நில உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு அரசுக்கு உயர் நீதின்றம் உத்தரவு

சென்னை

அதிகாரிகள் செய்த பாவத்துக்காக சிலுவை சுமக்க நீதித்துறை ஒன்றும் ஏசு கிறிஸ்து அல்ல என அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், நில ஆவணங்களை பெயர் மாற்றம் செய்து கொடுக்காமல் உரிமையாளரை 20 ஆண்டுகளாக அழைக்கழித்தமைக்காக ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் வீரப்பநாயக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் அரசு திட்டத்துக்காக கடந்த 1988-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து ரத்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நில ஆர்ஜிதம் செய்து பிறப்பித்த உத்தரவை கடந்த 2000-ம் ஆண்டு ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படாத நிலையில், நிலத்தை மீண்டும் ரத்தினம் பெயருக்கு மாற்றித்தராமல் அதிகாரிகள் கடந்த 20 ஆண்டுகளாக அழைக்கழித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தனது நிலத்தின் ஆவணங்களை தனது பெயருக்கு பெயர் மாற்றம் செய்து தரக்கோரி ரத்தினம் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.சேஷசாயி முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், இதுதொடர்பாக பல மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என வாதிடப்பட்டது.

அதிகாரிகளின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு இழப்பீடாக அரசு ரூ. ஒரு லட்சம் வழங்க உத்தரவிட்டார். மேலும், இதுபோன்ற விவகாரங்களில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால், நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும் என தெரிவித்த நீதிபதி, அதிகாரிகள் செய்த பாவத்துக்காக சிலுவை சுமக்க நீதித்துறை ஒன்றும் ஏசு கிறிஸ்து அல்ல எனவும் கருத்து தெரிவித்தார். இதேபோல, 10 ஆண்டுகளாக தனது நில ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்து தராததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெரம்பலூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருக்கும், அரசு தரப்பில் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x