Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

சூறாவளி காற்றுடன் மழை வேளாங்கண்ணியில் 10 கடைகள் சேதம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் குளம்போல தண்ணீர் தேங்கியுள்ளது. வயல்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், நெற்பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை வேளாங்கண்ணியில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகில் உள்ள 10 கடைகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த தகரத்தினாலான மேற்கூரைகள் சேதமடைந்தன. மேலும், வேளாங்கண்ணி பேராலய அறை முன்பதிவு மைய மேற்கூரையும் சேதமடைந்துள்ளது.

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று காலை வரை பெய்த மழையளவு(மில்லிமீட்டரில்): நாகப்பட்டினம் 79.40, திருப்பூண்டி 115.80, வேதாரண்யம் 178.40, தலைஞாயிறு 142.60, மயிலாடுதுறை 64, மணல்மேடு 35, சீர்காழி 45, கொள்ளிடம் 16, தரங்கம்பாடி 45.

காரைக்கால்: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்தது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நேற்று முன்தினம் பரவலாக கன மழை பெய்தது. தொடர்ந்து நேற்று மாலை வரை பெய்த பலத்த மழையால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் நீர் தேங்கியது. காரைக்கால் நகரப்பகுதியில் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர். தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும், அவ்வப்போது லேசான காற்று வீசுவதாலும் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் பலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

காரைக்காலில் நேற்று காலை 8.30 மணி வரை 67.9 மிமீ மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x