Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

புதுச்சேரியில் அடுத்து பாஜக கூட்டணி ஆட்சியே அமையும்: பொறுப்பாளர் கருத்து

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் காரைக்காலில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பாஜக புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா செய்தியாளர்களிடம் கூறியது:

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக சார்பில், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த அரசு முற்றிலும் தோல்வியடைந்த அரசு என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். புதுச்சேரி அரசு ரேஷன் கார்டுகளைக் கூட சரிவர வழங்கவில்லை. மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. இந்த ஆட்சி குறித்து மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற சொல்வதற்கு முதல்வருக்கு எந்த உரிமையும் இல்லை. முதல்வர் தனது தோல்விகளை மறைக்க இதுபோன்ற நாடகத்தனமான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். மக்கள் நலன் குறித்து அவர் சிந்திக்கவே இல்லை. துணைநிலை ஆளுநருக்கு எதிராக காங்கிரஸார் மேற்கொண்ட போராட்டத்தில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் கூட பங்கேற்கவில்லை. கூட்டணி கட்சியான திமுகவும் பங்கேற்கவில்லை. இந்த அரசு தோல்வியடைந்துவிட்டதாக பாஜக மட்டும் சொல்லவில்லை. அவர்களது கூட்டணிக் கட்சியினரின் கருத்தும் இதுதான். மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. புதுச்சேரியில் அடுத்து பாஜக கூட்டணியின் ஆட்சி அமையும் என்று நூறு சதவீத நம்பிக்கை உள்ளது. புதுச்சேரியில் ஏற்கெனவே உள்ள பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணி வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும் என்றார்.

கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x