Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

அரிசி கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் திருப்பத்தூர் எஸ்பியிடம் கிராமமக்கள் புகார்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்துக்கு உட்பட்ட ஜாப்ராபாத் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர். பிறகு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமாரிடம் அவர்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் இருந்து தினசரி டன் கணக்கில் ரேஷன் அரிசிவெளிமாநிலங்களுக்கு கடத்தப் படுகிறது. குறிப்பாக, வாணியம் பாடி வட்டத்துக்கு உட்பட்ட ஜாப்ராபாத் பகுதியில் இருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது.

அரிசி கடத்தல் தொழிலில் இளைஞர்கள், பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. மேலும், புகார் அளித்தவர்களை அரிசி கடத்தல் கும்பல் மிரட்டுகின்றனர். இரவு நேரங்களில் கனரக வாகனங்களில் அரிசி கடத்தல் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. மாவட்ட சோதனைச்சாவடிகளில் கண் காணிப்பை பலப்படுத்த வேண்டும்.

அரிசி கடத்தல் கும்பல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க தயாராக உள்ளோம். ஆனால், காவல் துறையினர் கடத்தல் கும்பலுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், அரிசி கடத்தும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என தெரிவித்துள்ளனர்.

மனுவை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x