Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

அரசியலுக்கு வருமாறு போராட்டம் நடத்தி மேலும் வேதனைக்கு உள்ளாக்காதீர்கள்!ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் உருக்கமான வேண்டுகோள்

சென்னை

‘‘நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று போராட்டம் நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்’’ என்று ரசிகர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து, அவரது உடல்நலன்தான் தங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், இதுதொடர்பாக அவர் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினர்.

ஆனால், ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும் பெரும் ஆவலோடும், எதிர்பார்ப்புடனும் காத்திருந்த ரசிகர்களிடம் அவரதுஅறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி அறவழிப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதில் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று மன்றத் தலைமையும், நிர்வாகிகளும் கூறிய பிறகும், காவல் துறையின் அனுமதி பெற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரஜினி ரசிகர்கள் நேற்று முன்தினம் அறவழிப் போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள், மக்கள் மன்றத்தினர் இதில் கலந்துகொண்டு, ரஜினி அரசியல் கட்சிதொடங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதைத் தொடர்ந்து, ரஜினி,நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ரஜினி மக்கள் மன்ற பொறுப்பில்இருந்தும், மன்றத்தில் இருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சிலர்சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் அந்த நிகழ்வை நடத்தியதற்கு என்பாராட்டுகள். இருந்தாலும், தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று,இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என் மனமார்ந்த நன்றி.

நான் ஏன் இப்போது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கெனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவுசெய்து, இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த், உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x