Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

அரியர் தேர்வு அட்டவணையை பிப்.4-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் பல்கலை.களுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகமோ அரியர் தேர்வுகளை நடத்துவது தொடர்பான கால அட்டவணையை வரும் பிப்.4-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால் இறுதி பருவத்தேர்வு தவிர்த்து மற்ற தேர்வுகளை ரத்துசெய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளுக்கு பதில்அளித்த பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்,‘அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிகளுக்கு முரணானது’ என பதில்மனு தாக்கல் செய் திருந்தது.

ஆனால் தமிழக அரசு தரப்பில், அரியர் தேர்வுகளை ரத்து செய்யபல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவுஎடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே சில பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வுகள் நடத்தாமலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருவதாக வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் கூடுதலாக மனு தாக்கல் செய்தார். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாகவோ அல்லது ஆன்லைன்மூலமாகவோ, பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும், தேர்வு நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் சார்பில், ‘‘மாணவர்களின் நலன் கருதியே முன்பு அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் கரோனா சூழல் மாறியுள்ளதால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகங்கள் முடிவு செய்துள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் அரியர் தேர்வு தொடர்பான தேர்வு அட்டவணையை வரும் பிப்.4-ம்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x