Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விழாக்குழுவினர் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த அன்பரசன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஏ.கே.கண்ணன் தலைமையில் குழு அமைத்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழாக்குழு அமைப்பது தொடர்பான அமைதிக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குழுவுக்கு கண்ணனை தலைவராக்கப் பெரும்பாலானோர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அமைதிக் கூட்டத்தில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

இதற்கிடையே அமைதிக் கூட்டத்தில் அனைவரும் ஆதரவு தெரிவித்தாகக் கூறி கண்ணன் தலைமையில் குழு அமைத்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கண்ணன் பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு குழுத் தலைவராக இருந்து வருகிறார். ஜல்லிக்கட்டு கணக்கு வழக்குகளை முறையாக ஒப்படைப்பதில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அமைதியாக நடந்து வருகிறது.

மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பட்டியல் வகுப்பினருக்குப் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. எனவே, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவுக்கு ஏ.கே.கண்ணன் தலைமையில் விழாக்குழு அமைத்து ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, விழாக் குழுவை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர் ஆகியோர் வாதிடும்போது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கடந்த ஆண்டுபோல விழாக்குழுவினருக்கு முதல் மரியாதை வழங்கவும், சாதி ரீதியாக, அரசியல் ரீதியாக ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கவும் தடை விதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு கணக்கு வழக்குகளைப் பராமரிக்கத் தனி வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டும் என்றனர்.

இவற்றை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு விளையாட்டை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகள் இந்த ஆண்டும் பொருந்தும். மனுதாரர் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ள 3 கோரிக்கைகளையும் விழாக்குழு பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

பாலமேடு வழக்கு

இதேபோன்று பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவை மாற்றியமைக்கக் கோரி தாக்கலான மனுவும் விசாரணைக்கு வந்தது. கடைசி நேரத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதால் ஏற்க முடியாது எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x