Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

கரோனா தடுப்பு விதிமீறல் நடவடிக்கைரூ.3.5 கோடி அபராதம் வசூல்

சென்னை: கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத தனி நபர் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து சென்னை மாநகராட்சி ரூ.3 கோடியே 48 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா பரவலைத் தடுக்க, விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு செப்.4-ம் தேதி அவசரச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. அதன்படி, தனிமைப்படுத்தப்படுதல் வழிமுறைகளை மீறுதல் போன்றவற்றுக்கு ரூ.500, முகக் கவசம் அணியாதவர்கள், முறையாக அணியாதவர்களுக்கு ரூ.200 என அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பொது இடங்கள், வணிக நிறுவனங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் சார்ந்த இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அரசால் அறிவிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் அபராதத் தொகையாக ரூ.3 கோடியே 48 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் தங்களின் தவறை உணர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றவே இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x