Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 20 பவுன் கொள்ளை வாழப்பாடி அருகே முகமூடி கும்பல் கைவரிசை

வாழப்பாடி அருகே தனியார் மருந்து கம்பெனி ஊழியரை தாக்கி 20 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

வாழப்பாடி அடுத்த புதுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் வசித்து வருபவர் சந்திரசேகர் (35). இவர் தனியார் மருந்து கம்பெனியில் உதவி மேலாளராக பணிபுரிகிறார்.

இவர் கடந்த 9-ம் தேதி இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டு கதவை உடைக்கும் சத்தம் கேட்டு சந்திரசேகரன் மற்றும் குடும்பத்தினர் எழுந்தனர்.

அப்போது, வீட்டுக்குள் முகமூடி அணிந்த 10 பேர் புகுந்து சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பினர்.

இதுதொடர்பான புகாரின்பேரில் வாழப்பாடி போலீஸார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

ரூ.9 லட்சம் திருட்டு

சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீரமணி (65). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் ஈரோட்டில் உள்ள மகள் வீட்டுக்கு பேருந்தில் சென்றனர். அப்போது, ஒரு பையில் ரூ.9 லட்சம் வைத்திருந்தார்.

சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றபோது, 5 பேர் கொண்ட கும்பல் பேருந்தில் ஏறினர். அப்போது, வீரமணியிடம் கீழே ஐந்து ரூபாய் நோட்டு கிடக்கிறது அது உங்களுடையதா பாருங்கள் என்றனர்.

இதையடுத்து, கணவன், மனைவி இருவரும் 5 ரூபாய் கிடக்கிறதா எனத் தேடினர். பின்னர் சங்ககிரி பழைய பேருந்து நிறுத்தம் வந்ததும் 5 பேரும் பேருந்தில் இருந்து இறங்கி சென்றனர். வீரமணி ஈரோடு வந்தவுடன் அவர் பணம் வைத்திருந்த பையை தேடியபோது காணவில்லை.

அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், சங்ககிரியில் பேருந்தில் ஏறிய மர்ம நபர்கள் 5 பேர் தனது கவனத்தை திசை திருப்பி ரூ.9 லட்சத்தை திருடிச் சென்றதாக தெரிவித்தார். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x