Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

பாதுகாப்புடன் பாம்புகளை பிடிப்பது குறித்து பயிற்சி முகாம்

பாம்புகளை பாதுகாப்புடன் பிடிப்பது, அவற்றை ஆபத் தின்றி கையாளுவது மற்றும் வனப்பகுதியில் பாதுகாப்புடன் விடுவித்தல் ஆகியவை குறித்து ஒரு நாள் பயற்சி முகாம் ஓசூர் வனக்கோட்டத்தில் நடைபெற்றது.

சென்னை பாம்பு பண்ணை, ஓசூர் வனக்கோட்டம், ஓசூர் மக்கள் சங்கம் இணைந்து இப் பயற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன. மத்திகிரி ஓசூர் வனக்கோட்டம் அரங்கில் நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாமை மாவட்ட வன அலுவலர் பிரபு முன்னிலையில் தருமபுரி மண்டல வனப்பாதுகாவலர் தீபக் பில்கி தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் சென்னை பாம்பு பண்ணை நிபுணர் எஸ்.ஆர்.கணேசன் தலைமை யிலான குழுவினர் பயிற்சி அளித்தனர். விஷமுள்ள பாம்புகளையும், விஷமில்லா பாம்புகளையும் கண்டறிந்து அவற்றை பாது காப்புடன் பிடிப்பது, பிடிக்கப்பட்ட பாம்பு களை ஆபத்தின்றி எப்படி கையாளுவது, பாம்புகளை வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்புடன் விடுவிப்பது ஆகியவை குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். இப் பயிற்சியில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 50 பேர் பங்கேற்றனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பிரபு கூறுகையில், ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள ஓசூர், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முறையான பயிற்சி இன்றி பாம்பு பிடிப்பவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்புடன் பாம்பு பிடிப்பது குறித்தும், வனத்துறைக்கு தகவல் அளிப்பது குறித்தும், வனத்துறையினரின் உதவியுடன் பாதுகாப்புடன் வனப்பகுதியில் பாம்புகளை விடுவிப்பது குறித்தும் முறையான பயிற்சி அளிப்பவது இம்முகாமின் முக்கிய நோக்கம், என்றார்.

பயிற்சி முகாமில் வனச்சரகர்கள் ஆர்.ரவி, வெங்கடாசலம், சுகுமார் உட்பட 7 வனச்சரகர்கள், ஓசூர் மக்கள் சங்க தலைவர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x