Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

வேலூர் விமான நிலையத்துக்கு கூடுதலாக 11 ஏக்கர் நிலம்கையகப்படுத்த நடவடிக்கை

வேலூர் விமான நிலையம் விரிவாக்க பணிக்காக நில எடுப்பு செய்வது தொடர்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் விமான நிலையத்துக்கான கூடுதலாக 11 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் அடுத்த அப்துல்லா புரத்தில் உதான் திட்டத்தின் கீழ் சிறிய ரக விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான நிலையத்துக்கான ஓடுதளம், பயணிகள் முனையத்துடன் இணைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் மார்ச் மாதம் விமானம் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விமான நிலையம் கட்டுமானப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், விமான நிலையத்துக் காக கூடுதலாக 11 ஏக்கர் நிலம் தேவை தொடர்பாக இந்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் கோரிக்கை குறித்து ஆலோசிக்கப் பட்டது. இதற்காக அருகே உள்ள மயானத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

மயானத்துக்கு மாற்று இடம் தேர்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், ஆசனாம்பட்டு-அப்துல்லாபுரம் சாலையில் உள்ள மரங்களை அகற்றுவது, உபயோகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, தாழ்வான மின் கம்பிகளை மாற்றியமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x