Published : 04 Jan 2021 03:19 AM
Last Updated : 04 Jan 2021 03:19 AM

ஒலிம்பிக்கில் வென்ற தங்கமகன்

ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்றுகொடுத்த முதல் இந்தியர் என்ற பெருமை அபினவ் பிந்த்ராவுக்கு உள்ளது.

1982-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி டேராடூனில் பிறந்த அபினவ் பிந்த்ராவுக்கு, மற்ற வீரர்களுக்கு கிடைக்காத ஒரு வசதி இருந்தது. அது பணவசதி. ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் புழங்கும் ஒரு வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளராக அவரது தந்தை இருந்தார். சிறு வயதில் இருந்தே துப்பாக்கி சுடுதலின் மீது ஆர்வமாக இருந்த அபினவுக்கு அவரது தந்தை ஒரு பொம்மைத் துப்பாக்கியை பரிசளிக்க, அதிலேயே குறிபார்த்து சுடத் தொடங்கினார். அப்போதுதான் தன் மகனுக்கு ஆர்வத்துடன் திறமையும் இருக்கிறது என்பதை அவரது தந்தை உணர்ந்தார்.

துப்பாக்கி சுடும் வீரரின் முக்கிய தேவைகளில் ஒன்று நல்ல கண் பார்வை. அப்போதுதான் அவரால் நன்றாக குறிபார்த்து சுட முடியும். ஆனால், அபினவ் பிந்த்ராவுக்கு சிறுவயதிலேயே பார்வையில் குறைபாடு இருந்தது. ‘மைனஸ் 4’ பார்வை குறைபாடு கொண்ட சூழலில், தான் ஒரு துப்பாக்கி சுடும் வீரனாக விரும்புவதாக தந்தையிடம் அபினவ் பிந்த்ரா கூறியுள்ளார்.

மகனுக்கு துல்லியமான பார்வை இல்லை என்றாலும், அவர் விரும்பியதைச் செய்து முடிக்க அபினவின் தந்தை அபிஜித் பிந்த்ரா உறுதுணையாக இருந்தார். துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததுடன், வீட்டிலேயே அவர் பயிற்சிபெற வசதியாக ஒரு சிறிய பயிற்சி மையத்தையும் அமைத்துக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, அமித் பட்டாச்சார்ஜி, லெப்டினென்ட் கர்னல் தில்லான் ஆகியோரிடம் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார் அபினவ். கேட்டதை வாங்கிக் கொடுக்கும் அப்பா, சிறப்பாக வழிகாட்டும் குருநாதர்கள் என்று கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட அபினவ், துப்பாக்கி சுடும் பிரிவில் சிறகடித்து பறந்தார்.

அன்று தந்தை கொடுத்த ஊக்கம்தான் நமக்கு அபினவ் பிந்த்ரா எனும் துப்பாக்கி சுடும் நாயகனைத் தந்தது. ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கமே வெல்லாமல் இருந்த இந்தியாவின் ஏக்கமும் தீர்ந்தது. 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஏர் ரைபிள் பிரிவில் அவர் வென்ற தங்கப் பதக்கம்தான் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியா வென்ற ஒரே தங்கப் பதக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x