Published : 04 Jan 2021 03:19 AM
Last Updated : 04 Jan 2021 03:19 AM
தமிழகப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4-ம் தேதி (இன்று) வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5-ம்தேதி (நாளை) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.
6-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும். 7-ம் தேதி ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 4 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம், திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 3 செ.மீ., நாகப்பட்டினம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், காரைக்கால், ராமேசுவரத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT