Published : 04 Jan 2021 03:19 AM
Last Updated : 04 Jan 2021 03:19 AM

கடலோர மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழகப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4-ம் தேதி (இன்று) வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5-ம்தேதி (நாளை) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

6-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும். 7-ம் தேதி ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

3-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 4 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம், திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 3 செ.மீ., நாகப்பட்டினம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், காரைக்கால், ராமேசுவரத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x