Published : 01 Jan 2021 07:52 AM
Last Updated : 01 Jan 2021 07:52 AM

சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாககொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றும் சஞ்ஜிப் பானர்ஜியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஏ.பி.சாஹி நேற்றுடன்பணிஓய்வு பெற்றார். அதையடுத்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றும் சஞ்ஜிப் பானர்ஜியை, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த பரிந்துரையை மத்திய சட்டத் துறை அமைச்சகம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அதன்படி நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 1961-ம் ஆண்டு நவ.2-ம் தேதி பிறந்த சஞ்ஜிப் பானர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து 1990-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். கொல்கத்தா, டெல்லி, ஜார்கண்ட், அலகாபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றிய சஞ்ஜிப் பானர்ஜி, சிவில், நிறுவன சட்டங்கள், சமரசத் தீர்வு, அரசியலமைப்பு சட்டம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். கடந்த 2006-ம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x