Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM
தமிழகத்தில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 4 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த நவ.11-ம் தேதி தெரிவித்த முதல்வர் பழனிசாமி, ‘‘உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தின் கீழ், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் தங்கள் நல உதவிகளை பெற்று வருகின்றனர். இதில் 4 லட்சம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வகையில், அவர்களுக்கு என்று தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்று பால்வளத் துறை அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழில் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்தனர். இதைக் கருத்தில் கொண்டு, பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு என தனியே ஒரு அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்படும்’’ என்றார்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்கப்படுகிறது. இதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தலைவராகவும், தொழிலாளர் துறை செயலாளர், தொழிலாளர் ஆணையர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரஇயக்குநர் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர். இதுகுறித்த நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும்நலவாரியத்தில் ஏற்கெனவே பதிவுசெய்துள்ள 62 ஆயிரத்து 661 பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு இந்த நலவாரியம் தொடங்கப்படும்.
தற்போதைய சூழலில் 1,250 பட்டாசு, 870 தீப்பெட்டி தொழிற்சாலைகள் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலைகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார். இத்தொழிற்சாலைகளில் பணியாற்றும்அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் புதிய நலவாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்து பயன்பெறலாம். இந்த நலவாரியத்தின் தலைமையிடம் சென்னையில் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT