Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

இசைக்கூடாரம் இருந்த இடம் தெரியாமல் தகர்க்கப்பட்டதால் மனவேதனை பிரசாத் ஸ்டுடியோவுக்கு இளையராஜா வரவில்லை குடோனில் விருதுகள், இசை ஆவணங்கள், அரிய புகைப்படங்கள்

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இருந்த தனது இசைக்கூடாரத்தின் அறை தற்போது இருந்த இடம் தெரியாமல் தகர்க்கப்பட்டதை அறிந்து மனவேதனை அடைந்தஇளையராஜா, ஸ்டுடியோவுக்கு நேற்று வரவில்லை.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் ஸ்டுடியோ செயல்பட்டு வந்தது. இளையராஜா தனக்கு மிகவும் நெருக்கமான இடமாக அவ்விடத்தைக் கருதினார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டுடியோவளாகத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என்று ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் - இளையராஜா இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்குநீதிமன்றத்துக்குச் சென்றது.

இதற்கிடையே, ஆவணங்கள், இசைக்கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொள்ளவும், தியானம் செய்யவும் காலை 9 மணி முதல் 4 மணிக்குள் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் சென்று வர இளையராஜாவுக்கு அனுமதி அளித்து நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று இளையராஜா ஸ்டுடியோவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வரவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் கூறியதாவது:

பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள இளையராஜா இசைக்கூடாரத்தின் சாவி அவரிடம் உள்ளது. ஆனால், இன்று வந்து பார்த்தால், அந்த அறையே இல்லை. அந்த அறை தகர்க்கப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்பட்டுள்ளன. அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதைச் சரிபார்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுபற்றி இளையராஜாவிடம் கூறியபோது, ‘அந்த அறையையும் அதிலிருக்கும் பொருட்களையும் பார்க்க வேண்டும் என்ற முனைப்பில்தான் அங்கு வரவேண்டும் என்று சொன்னேன். அந்த அறையே இல்லை என்றால், நான் அங்கு வந்து என்ன செய்வது, எனக்கு மனவேதனை அதிகமாகும். என்னால் தாங்கிக்கொள்ள இயலாது' என்றுகூறிவிட்டார்.

ஒரு பெரிய ரெக்கார்டிங் தியேட்டர் உள்ளிட்ட 5 அறைகள் உள்ளன. அவருடைய பத்ம விபூஷண் விருதுகூட அந்த அறையில்தான் உள்ளது.மிக முக்கியமான ஆவணங்கள்,இசைக் குறிப்புகள், அரிய புகைப்படங்கள், விருதுகள் என அத்தனையும் குடோனில் போடப்பட்டுள்ளதை அவரால் தாங்க முடியவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x