Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

இமாச்சலில் உள்ள அடல் சுரங்கப்பாதையில் ஒரே நாளில் 5,450 வாகனங்கள் பயணம்

சிம்லா: இமாச்சலப் பிரதேசம் மணாலியில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக, அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் திறந்து வைத்தார். ரோட்டங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 9.2 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையாகும். மணாலி-லாகுல் இடையிலான இந்த சுரங்கப்பாதை சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

இந்த சுரங்கப்பாதை திறக்கப்பட்டதில் இருந்து முதல்முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே நாளில் 5,450 வாகனங்கள் சென்றன. இதில் 2,800 வாகனங்கள் மணாலியில் இருந்து லாகுலுக்கும் அதேபோல லாகுலில் இருந்து மணாலிக்கு 2,650 வாகனங்களும் சென்றன. நேற்று 5,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இரு பக்கமிருந்தும் சென்றன. ஒவ்வொரு ஆயிரம் வாகனங்களுக்கும் ஒருமுறை வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து சீராக்கப்படுகிறது.

அடல் சுரங்கப்பாதையில் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. முந்திச் செல்ல முயன்ற 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக குலு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுரவ் சிங் தெரிவித்தார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கரோனா விதிமுறைகளை மீறியதாகவும் 15 பேர் கைது செய்யப்பட்டு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x