Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM
கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தபால் நிலையம் வெளியிட்ட ஸ்டாம்பில் கிரிமினல் குற்றவாளிகளான சோட்டா ராஜன், முன்னா பஜ்ரங்கி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்கட்ட விசாரணையில் வாடிக்கையாளர் யாரோ ஒருவர் விஷமத்தனமாக ‘மை ஸ்டாம்ப்’ வசதியை பயன்படுத்தி இதுபோன்று குற்றவாளிகளின் படங்களுடன் ஸ்டாம்ப் வெளியிட வைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கான்பூர் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஹிமான்சு மிஸ்ரா கூறும்போது, ‘‘மை ஸ்டாம்ப் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் அடையாள அட்டையுடன் விண்ணப்பங்களை அளித்து தங்கள் படங்கள் இடம் பெற்ற தபால் தலைகளை பெறும் வசதியை தபால் துறை வழங்குகிறது. இந்த வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். தபால் துறை ஊழியர்களும் படங்களை சரிபார்ப்பதில் கவனமுடன் செயல்பட வேண்டும். இந்த விஷயம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT