Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM

ஆந்திர முதல்வர் ஜெகன் பிறந்தநாளில்பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

திருப்பதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், அன்னதானம், ரத்த தானம் போன்ற பொது சேவைகளில் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், ‘‘ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் உடல் ஆரோக்கியத்துடன், நீடுழி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்’’ என பதிவிட்டிருந்தார். இதேபோல தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, ‘‘ஜெகன் மோகன் என்றும் எப்போதும் மகிழ்ச்சியாக நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள்’’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜெகன் பிறந்தநாளையொட்டி நகரி தொகுதி எம்எல்ஏ.வும் நடிகையுமான ரோஜா, திருப்பதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படிக்கும், பெற்றோர் இல்லாத புஷ்ப குமாரியை (13) தத்தெடுத்தார். பின்னர் இதுகுறித்து ரோஜா செய்தியாளர்களிடம் கூறும்போது ‘‘ஒரு நல்ல மனிதரின் பிறந்தநாளில், ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டுமென நினைத்தேன். எனவே, புஷ்பகுமாரியை தத்தெடுத்தேன். அவருக்கு யாரும் இல்லை. நன்றாக படிப்பவள். அவளுக்கு மருத்துவ படிப்பு படிக்க வேண்டுமென்பது குறிக்கோள். அவரது கல்விச் செலவை முற்றிலுமாக ஏற்பேன்’’ என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x