Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM
கரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, போல்பூரில் நேற்றுசாலை வழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். குடியுரிமை திருத்த சட்டம், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் உள்ளிட்ட விவகாரம் குறித்த செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமித் ஷா அளித்த பதில் வருமாறு:
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இது மிகப் பெரிய நடைமுறையாகும். இதை கரோனா வைரஸ் பிரச்சினைக்கு மத்தியில் செய்ய முடியாது. எனவே, கரோனாவுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில் எந்த விதிகளும் மீறப்படவில்லை. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையும் மீற வில்லை. இந்த 3 அதிகாரிகளின் இடமாற்றம் முற்றிலும் சட் டத்துக்குட்பட்டதுதான். அரசியலமைப்பு சட்டத்தின்படியே அவர் களுக்கு பணியிடமாற்ற ஆணை அனுப்பப்பட்டுள்ளது.
பாஜக வலுப்பெறும்
பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கொல்கத்தா வந்தபோது அவரது பாதுகாப்பு வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு முழுக்க முழுக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரே காரணம். ஆட்சி அதிகாரத்தின் ஆணவத்தால்தான் இந்த சம்பவமே நடைபெற்றது. எங்கள் கட்சியினரை திருப்பித் திருப்பி தாக்குவதால் இங்கு பாஜக வலுப்பெற்றுக் கொண்டே இருக்கும்.ஊழலும், வன்முறையும் மேற்கு வங்கத்தில் படு உச்சத்தில் உள்ளன. இதுவரை 300-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் கொன்றுள்ளார்கள். வங்கத்தின் மகனே இந்த மாநிலத்தின் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT