Published : 18 Dec 2020 03:16 AM
Last Updated : 18 Dec 2020 03:16 AM
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததால், பல பச்சிளம் குழந்தைகள் கடந்த 2017-ம் ஆண்டு இறந்தன. இதையடுத்து மருத்துவமனை டாக்டர் கபீல் கான் உட்பட 10 டாக்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களில் 9 பேர் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டனர். ஆனால், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் டாக்டர்கபீல் கான் பேசிய பேச்சு சர்ச்சைக்குரியதாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அலிகார் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கபீல் கான் காவலில் வைக்கப்பட்டார். இதை எதிர்த்து கபீல் கானின் தாய் நுஸ்ரத் பர்வீன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கபீல் கானின் பேச்சில் சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் மாவட்ட ஆட்சியர் கருத்தில் கொண்டுள்ளார். முழு பேச்சையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, கபீல் கானை உடனடியாக விடுவிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உ.பி. அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறும்போது, ‘‘கபீல் கானை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அவர் மீதான கிரிமினல் வழக்குகள், அதன் தகுதிக்கேற்ப முடிவு செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தனர். இதையடுத்து கபீல் கான் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT