Published : 18 Dec 2020 03:16 AM
Last Updated : 18 Dec 2020 03:16 AM

விவசாயிகள் போராட்டத்துக்கு தடை விதிக்க முடியாது உச்ச நீதிமன்றம் கருத்து

விவசாயிகளுக்கு போராட உரிமை உள்ளது. அவர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, ‘அரசு மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறும்போது, ‘‘புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட விவசாயிகளுக்கு உரிமை உள்ளது. அவர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க முடியாது. எனினும் போராட்டத்தின்போது யாருடைய உயி ருக்கும், உடைமைக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. விவசாயி களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக புதிய வேளாண் சட்டங்களை இப்போதைக்கு அமல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளிக்குமா" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால், ‘‘இதுகுறித்து மத்திய அரசிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதால் அவகாசம் தேவை’’ என்று கோரினார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி, ‘‘விவசாய சங்கங்களின் கருத்துகளை கேட்ட பிறகு உரிய உத்தரவு பிறப்பிக்கப் படும். புதிய வேளாண் சட்டங்கள் செல்லாது என்று அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பின்னர் விசாரிக்கப் படும்’’ என்று தெரிவித்தார். தலைமை நீதிபதி பாப்டே குளிர் கால விடுமுறையில் செல்வதால், விவசாயிகள் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x