Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

7 இடங்களில் மதிப்பு கூட்டு மையங்கள் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தகவல்

கோவை: கோவை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், விவசாயிகளுக்கான பணிமனை நடைபெற்றது.

வேளாண்மைத் துறை துணை இயக்குநர் க.சுந்தர வடிவேலு வரவேற்றார். கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகித்தார். வனக் கல்லூரி முதல்வர் கா.த.பார்த்திபன், வேளாண் வணிக கூடுதல் இயக்குநர் ஆர்.திலகவதி, இணை இயக்குநர்கள் ஜெ.சேகர், ஆர்.சித்ராதேவி, மா.புவனேஸ்வரி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ர.பெருமாள்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல், அறுவடையின் செய் நேர்த்தி, சந்தைப்படுத்துதல் மற்றும் விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்தல், கிராமங்களில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்குதல், நீர்ப்பாசன முறையை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

பணிமனையைத் தொடர்ந்து ஆட்சியர் கு.ராசாமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கு, அதிக விலை கிடைக்க உதவிடும் வகையில், கோவை மாவட்டத்தில் மட்டும் 7 இடங்களில் ரூ.37 கோடியில் மதிப்பு கூட்டுதல் பணிக்காக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x