Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM
கோவை வைசியாள் வீதி, கெம்பட்டி காலனி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் நகைக் கடைகள் மற்றும் பட்டறைகள் உள்ளன. நகைக் கடைகளில் இருந்து தங்கக் கட்டிகளை வாங்கும் பட்டறையாளர்கள், தங்க ஆபரணங்களை செய்து அளிக்கின்றனர். இதேபோல, செல்வபுரம் அசோக் நகரில் நகைப் பட்டறை நடத்தி வரும் ஒருவர், நகைக் கடைகள், பெரிய பட்டறைகளைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரிடமிருந்து 25 கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகளை வாங்கியதாகவும், ஆனால் நகைகளை செய்து தராமல், தலைமறைவாகி விட்டதாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து கோவை கடைவீதி காவல் துறையினர் கூறும்போது, "நகை செய்து தருவதாகக் கூறி சுமார் 25 கிலோ தங்கக்கட்டிகளுடன், நகைப் பட்டறை உரிமையாளர் ஒருவர் மாயமானதாகப் புகார்கள் வந்துள்ளன. எனினும், இது தொடர்பாக இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை. புகாரில் உண்மைத் தன்மை உள்ளதா? உண்மையிலேயே எவ்வளவு கிலோ தங்கக் கட்டிகளை திருடிக் கொண்டு, அந்த பட்டறையாளர் மாயமானார் என்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. முழு விசாரணைக்குப் பிறகே, மேல்நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT