Published : 13 Dec 2020 03:15 AM
Last Updated : 13 Dec 2020 03:15 AM

ஹைதராபாத் அருகே ரசாயன ஆலை வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் காயம்

ஹைதராபாத் அருகே உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஹைதராபாத் அருகே சங்காரெட்டி மாவட்டம், பொல்லாராம் கிராமத்தில் ஐடிஏ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு விந்தியா ஆர்கானிக் கெமிக்கல்ஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு ஷிப்ட்-க்கு 120 தொழிலாளர்கள் வீதம் தினமும் 360 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் நேற்று பிற்பகலில் பயங்கர சத்தத்துடன் ரியாக்டர் வெடித்துச் சிதறியது. இதனால் தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதியில் கரும் புகை பரவத் தொடங்கியது. தகவலின் பேரில் போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்தனர்.

8 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதனிடையே விபத்துபகுதியில் சிக்கிய தொழிலாளர்களை மற்ற தொழிலாளர்கள் மீட்டனர். எனினும் இதில் 8 பேர்காயம் அடைந்தனர். இவர்கள்பொல்லாராம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x