Published : 13 Dec 2020 03:15 AM
Last Updated : 13 Dec 2020 03:15 AM

முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக 2 பிரிவுகளில் திமுக எம்.பி. ராசா மீது வழக்கு பதிவு

முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக துணை பொதுச் செயலாளரான ஆ.ராசா எம்.பி., கடந்த 5-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் திருமாறன் புகார் கொடுத்தார்.

“ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆ.ராசா பேசியுள்ளார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து பொய்யான, ஆதாரம் இல்லாத செய்திகளை கூறியுள்ளார். அனைவரையும் ஒருமையில் பேசியிருக்கிறார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடர்ந்து அவதூறாக பேசிவரும் ராசா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின்பேரில், ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 153 (வேண்டும் என்றே ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவது), 505 (1) b (குறிப்பிட்ட அமைப்பையோ, மக்களையோ குற்றச் செயல்களில் ஈடுபட தூண்டுவது) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x